மூன்றாண்டுகளாக, நிரந்தர பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இன்றி, பொறுப்பு அதிகாரி களை கொண்டே, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை செயல்பட்டு வருவதாக, புகார் எழுந்துள்ளது.
விதிகளை மீறி...:
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை, துவக்கப்பட்டு, 10 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பேராசிரியர்களே, கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். இதில், பல்கலை பொறுப்பு பதிவாளராக இருந்த, பேராசிரியர் முருகனுக்கு, விதிகளை மீறி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது குறித்து, கவர்னர் வரை பிரச்னை சென்றது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. 'ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருப்பவர், அக்குழுவின் செயலரான பதிவாளர் பதவியில் இருக்கக்கூடாது' என, பல்கலை விதி இருப்பதால், பேராசிரியர் முருகன், சில தினங்களுக்கு முன், பதிவாளர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அப்பதவிக்கு, கணிதத்துறை மூத்த பேராசிரியர், முருகன், பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அதே போல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: பல்கலையில், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிகளுக்கு நிரந்தர நியமனத்திற்கு, கடந்த ஆண்டு டிசம்பரில், விளம்பரம் வெளியிடப்பட்டது. அதற்கு, பலர் விண்ணப்பித்தும் இதுவரை நியமனம் நடக்கவில்லை.
6 மாதங்களுக்குள்...:
விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளில் இருந்து, 6 மாதங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, நியமனம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், விண்ணப்பங்கள் இயல்பாகவே ரத்தாகி விடும். ஆனால், இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு, 11 மாதங்கள் முடிந்து விட்டது. அதற்கு விண்ணப்பங்களையும் பரிசீலிக்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில், அரசு தலையிட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment