தொலைநிலைப் படிப்புகளில் சேருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் தொலைநிலைப் படிப்புகளை நடத்துவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அனுமதியைப் பெற்றுள்ளதா என்பதை மாணவர்கள் உறுதி செய்துகொள்வது அவசியம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சில கல்வி நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் படிப்புகளில் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி முறையிலும் சேர்ந்து படிக்கலாம், அதற்கு யுஜிசி அனுமதி பெறப்பட்டிருப்பதாகத் தவறான விளம்பரங்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டிருப்பது யுஜிசி-க்குத் தெரியவந்துள்ளது.
இதுபோல, தொலைநிலைக் கல்வி முறையில் படிக்க விரும்பும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தற்போதைய அங்கீகார நிலையை http://www.ugc.ac.in/deb/ என்ற இணையதளத்தில் பார்த்து உறுதி செய்த கொண்ட பிறகே, சேரவேண்டும்.
அவ்வாறின்றி, யுஜிசி அனுமதி பெறாத கல்வி நிறுவனத்தில் தொலைநிலைப் படிப்பை மேற்கொண்டு பெறப்படும் பட்டம் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளுக்கு தகுதியற்றதாகக் கருதப்படும்.
அதோடு, கல்வி நிறுவனத்தின் கல்வி வழங்கக் கூடிய எல்லையையும் மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். அதாவது, மாநில அனுமதியை மட்டும் பெற்று நடத்தும் கல்வி நிறுவனங்கள் அந்த மாநிலத்துக்குள் மட்டுமே கல்வி மையங்களை அமைத்து தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும். அந்த மாநிலத்தைத் தாண்டி, பிற மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ கல்வி மையங்களைத் தொடங்க இயலாது. யுஜிசி-யின் சிறப்பு அனுமதியைப் பெற்ற பிறகே இதுபோல எல்லையைத் தாண்டி படிப்புகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment