சென்டாக்கில் காலியான 3 மருத்துவ இடங்களுக்கு இன்று இறுதிகட்ட கவுன்சலிங் நடைபெறுகிறது. புதுவையில் சென்டாக்கில் போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மோனிகா நீக்கப்பட்டார். இதுபோல், வேறு யாராவது போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்துள்ளார்களா? என்பதை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.ஆய்வின்போது, உண்மை தெரிந்து விடும் என்பதால் அடுத்தடுத்து 2 மாணவிகள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்து தாங்களாகவே விலகிய நிலையில், 27ம்தேதி மேலும் ஒரு மாணவி போலி சாதிச்சான்றிதழ் காரணமாக விலகினார்.
இந்நிலையில் காலியான மருத்துவம், துணை மருத்துவ இடங்களுக்கு இன்று (29ம்தேதி) கவுன்சலிங் நடைபெறுகிறது. இதுகுறித்து சென்டாக் கன்வீனர் நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 3 மருத்துவ இடங்களுக்கு இன்று கவுன்சலிங் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
அதில், வெங்கடேஸ்வரா மற்றும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரிகளில் பொதுப்பிரிவில் தலா ஒரு இடமும், பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் எம்பிசி பிரிவில் 1 இடமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாகே ராஜீவ்காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பொதுப்பிரிவில் 2 இடங்களும், எம்பிசி பிரிவில் 1 இடமும், மாகே பல் மருத்துவகல்லூரியில் பொதுப்பிரிவில் 2 இடமும், இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியில் பொதுப்பிரிவில் 7 இடங்களும், ஓபிசி பிரிவில் 1 இடமும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மதர் தெரசா கல்லூரியில் நர்சிங் படிப்புக்கு பொதுப்பிரிவில் 1இடமும், எம்எல்டி படிப்புக்கு பொதுப்பிரிவில் 4 இடங்களும், பி.பார்ம் படிப்பில் 2 இடங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையனைத்துக்கும் இன்று இறுதி கவுன்சிலிங் நடக்கிறது. புதுவை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு கவுன்சலிங் நடக்கிறது.
போலி சான்றிதழ் விவகாரத்தால் இதுவரை 4 மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் இருந்து விலகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 3 மருத்துவ இடங்களுக்கு மட்டுமே இன்று கவுன்சிலிங் நடைபெறும் என்று சென்டாக் நிர்வாகம் அறிவித்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், மிகுந்த அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்வீனர் அறிவிப்பு
Comments
Post a Comment