பள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் உடற்கல்வி ஆசிரியர் காலிபணியிடம், உபகரணங்கள் இன்மை உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யாமல், இதுபோன்ற நடவடிக்கைகளால் பலனில்லை என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 976 துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், உடற்கல்வி ஆசிரியர் தரத்தில் 3,500 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். தவிர 5,604 உயர்கல்வி பள்ளிகளிலும் சேர்த்து உடற்கல்வி இயக்குனர் கிரேட் -2 என்ற தரத்தில் ௮6 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் கிரேடு -1 என்ற தரத்தில் 320 ஆசிரியர்களே உள்ளனர்.இருப்பினும், அரசின் உத்தரவுப்படி 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர்கள் இருத்தல் அவசியம். இந்தகணக்கீடு படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இது நகர்புறங்களை காட்டிலும், கிராமப்புற பள்ளிகளில் அதிகம்.
தவிர, நடுநிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு ஏழு ரூபாய், உயர்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு 14 ரூபாய், மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு 21 ரூபாய் வீதம் அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு தேவைக்கு ஆண்டுதோறும், அரசால் மானியத்தொகை ஒதுக்கப்பட வேண்டும். இந்த தொகைப்படி உடற்கல்வி பயிற்சி மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக நிதி ஒதுக்குவதில்லை.
இதனால், பெரும்பாலான துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை விளையாட்டுகளுக்கான கூட விதிமுறை தெரியாத நிலை நீடித்து வருகிறது.
மேலும் சில உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளிலும் ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் என, மைதானத்தின் தேவை இருக்கும் விளையாட்டுகளில் போதிய மைதான வசதியில்லாததால், குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதனால், விளையாட்டில் ஆர்வமும், திறமையும் இருந்தும், பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளில், பங்கேற்க கூட முடியாமல் போய் விடுகிறது.
இப்படி, விளையாட்டு துறை சம்மந்தப்பட்ட பிரச்னைகள் நீடிக்கும் சமயத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, குத்துச்சண்டை, ஜூடோ, பென்சிங், சைக்கிளிங், பீச் வாலிபால், கேரம், செஸ், டென்னி காய்ட் உள்பட 13 வகையான விளையாட்டுகளை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என ஆணை பிறப்பித்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment