சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனம்: ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட முறைப்படி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இடஒதுக்கீடுசென்னை பல்கலைக்கழகத்தில் இப்போது நிரப்பப்படவுள்ள 96 பேராசிரியர்கள் பணியிடங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4 இடங்களும், மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 11 இடங்களும், பட்டியலினத்தவருக்கு 3 இடங்களும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுப்பிரிவினருக்கு 51 இடங்கள், அருந்ததியர் மகளிருக்கு 27 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக் கப்படும் தவறான இடஒதுக்கீட்டு முறை தான். சுழற்சி முறைதமிழகத்தில் 100 புள்ளி சுழற்சிமுறை இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தவரை பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனத்தில் குழப்பம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், 2007-ம் ஆண்டில் சில பிரிவினருக்கு உள் இடஒதுக்கீட்டு வழங்கப்பட்டதால், 100 புள்ளி சுழற்சி முறையை 200 புள்ளி சுழற்சி முறையாக மாற்றி தமிழக அரசு ஆணையிட்டது. இதில் தான் குழப்பம் ஏற்பட்டது. 200 புள்ளி சுழற்சி முறை இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்ட போது, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த 100 புள்ளி சுழற்சி முறையின் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், எந்த குழப்பமும் ஏற்பட்டிருக்காது. ஆனால், 100 புள்ளி சுழற்சி முறை அப்படியே கைவிடப்பட்டு, 200 புள்ளி சுழற்சி முறை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், முந்தைய முறையில் எந்த பிரிவுக்கெல்லாம் இடஒதுக்கீடு கிடைத்ததோ, அவர்களுக்கே மீண்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இடஒதுக்கீட்டை நிர்ணயித்து..முந்தைய முறையில் இடஒதுக்கீடு பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களில் மிகக்குறைந்த பணியிடங்களே இருக்கும் என்பதால், ஒரு பிரிவினருக்கு ஒரு முறை இடஒதுக்கீடு மறுக்கப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காது. அதுமட்டுமின்றி, ஒரு பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக் கீட்டை, இன்னொரு பிரிவினருக்கு வழங்குவதால் அவர்களுக்கிடையே தேவையற்ற பகைமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இன்று முதல் நடைபெற்று வரும் நேர்காணல்களை ரத்து செய்ய அரசு உத்தரவிட வேண்டும். 200 புள்ளி சுழற்சி முறையை கைவிட்டு, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த 100 புள்ளி சுழற்சி முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயித்து பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Comments
Post a Comment