குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், கடத்தல், மிரட்டல் போன்றவை அதிகரித்து வருகின்றன. அவைகளில் இருந்து குழந்தைகள் தப்பிக்க பாதுகாப்பு பாடம்:
குழந்தைகளுக்கு எப்போது புரிந்துகொள்ளும் சக்தி உருவாகிறதோ அப்போதிருந்தே, பெற்றோரின் பெயர், செல்போன் எண், வசிக்கும் இடத்தின் பெயர், தந்தை, தாய் வேலை பார்க்கும் நிறுவனம் போன்றவைகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். பக்கத்து வீட்டினர் மற்றும் நெருக்கமான உறவினர்களின் போன் நம்பர்களையும் முடிந்தால் மனதில் பதிய வைப்பது நல்லது. சாலையில் இடதுபுற ஓரமாக நடந்துசெல்லும்படி கூறுங்கள்.
பள்ளிக்கு செல்லத் தொடங்கிவிட்டால் பள்ளி அடையாள அட்டையை, பள்ளி அருகில் செல்லும்போது மட்டும் அணியாமல் வீட்டில் இருந்து கிளம்பும்போதே அணியச் செய்யுங்கள்.மற்றவர்கள் தரும் எந்த பொருளையும் வாங்கக்கூடாது, மற்றவர்கள் தரும் பொருட்களை சாப்பிடவும் கூடாது, மற்றவர்களை நம்பி அவர்களோடு செல்லவும் கூடாது என்பதை கண்டிப்பாக சொல்லி வையுங்கள். சிறுவர், சிறுமியர்களாக இருந்தால் பள்ளி, வீடு தவிர மற்ற இடங்களுக்கு செல்லும் போது எங்கே செல்கிறார்கள்? யாரோடு செல்கிறார்கள்? என்பன போன்ற தகவல்களை முதலிலே கூறி, உங்கள் அனுமதியோடு செல்லும்படி கூறுங்கள். பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு மற்ற இடங்களில் சுற்றித் திரியக்கூடாது என்பதையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் முதலிலே பிள்ளைகளிடம் எடுத்துக்கூறிவிடுங்கள். குழந்தைகளை மையமாக வைத்து நடக்கும் அசம்பாவி தங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள்.
அவர்களை பயப்படவைக்காமல் விழிப்புணர்வு கொடுக்கும் விதத்தில் அந்த தகவல்கள் இருக்கவேண்டும். தவறான நண்பர்கள், தோழிகளிடம் சேர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்துங்கள். அவர்களிடம் சேர்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்டுங்கள். ஷாப்பிங் மால்களில் பெற்றோரை பிரிந்துவிட்டால், அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்காமல், அழுது கொண்டிருக்காமல் அங்குள்ள செக்யூரிட்டியிடம் சென்று, பெற்றோரை பிரிந்துவிட்ட தகவலை சொல்ல வேண்டும் என்று சொல்லுங்கள். பொது இடங்களில் தொலைந்தால் போலீசாரிடம் சென்று, விவரத்தை கூறும்படி அறிவுறுத்துங்கள்.
போலீஸ் உதவிக்கான நம்பரையும் மனதில் பதியச் செய்யுங்கள். வீட்டில் தனியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அறிமுகமற்ற போன் வந்தால், தான் தனியாக இருக்கும் தகவலை சொல்ல வேண்டாம் என்று நினைவுபடுத்துங்கள். தனியாக இருக்கும் போது அறிமுகமற்ற யார் வந்தாலும் கதவை திறக்க வேண்டாம். ஜன்னல் வழியாக தகவலைக்கூறி அனுப்பிவிடச் சொல்லுங்கள். செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் தங்கள் தனிப்பட்ட விஷயங்கள், விலாசங்கள், படங்கள் போன்றவைகளை பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கூறுங்கள். பள்ளிக்கு செல்லும் போதோ, கடைகளுக்கு செல்லும்போதோ குறிப்பிட்ட நபர் தொடர்ந்து கண்காணிப்பது போன்று செயல்பட்டால் அந்த தகவலை உடனே தங்களிடம் கூறவேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.
சிறுவனோ, சிறுமியோ பள்ளிக்கு நடந்துசெல்வதாக இருந்தால் தனியாக செல்லாமல், மற்ற மாணவர்களோடு சேர்ந்து இணக்கமாக செல்லுமாறு கூறுங்கள். நண்பர்கள் எப்போதும் தேவை என்றுகூறி நட்பு பாராட்ட கற்றுக் கொடுங்கள். யாராவது பின்தொடருவது போன்றிருந்தால், உடனே பயந்திடவேண்டாம் என்றும், ஒளித்து நிற்கவேண்டாம் என்றும் சொல்லுங்கள். ஆபத்து ஏற்படப்போவதாக உள்ளுணர்வு சொன்னால், அருகில் உள்ள வீட்டினரிடமோ, வியாபார நிறுவனத்தில் உள்ளவர்களிடமோ தயங்காமல் உதவி கேட்க அம்மா அழைக்கிறார், அப்பா சீரியசாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று யார் அழைத்தாலும் உடனே அதை நம்பிவிடவேண்டாம் என்று அழுத்தமாக கூறுங்கள்.
உங்கள் குழந்தையின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை அதனிடம் ஊட்டுங்கள். யாரும் உடலைத் தொட்டாலோ, வேறு விதமான நடவடிக்கைகளில் இறங்கினாலோ தங்களிடம் கூறவேண்டும் என்று சொல்லிவையுங்கள்.
Comments
Post a Comment