டீசல் விலை லிட்டருக்கு 61 காசு உயர்ந்தது. மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
டீசல் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, டீசல் விலையை மாதம் தோறும் மாற்றி அமைக்க பொதுத்துறை எண்ணெய் கம்பெனிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவை கடந்த ஆண்டு ஜனவரி 17–ந் தேதி மத்திய அரசு பிறப்பித்தது. அதன்படி மாதம்தோறும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.அந்த வகையில் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் கம்பெனிகள் நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 50 காசு உயர்த்தி உள்ளன.
சென்னையில் 61 காசு உயர்வு
சென்னையில் வரியுடன் சேர்த்து இந்த விலை உயர்வு 61 காசுகள் ஆகும். இதன் மூலம் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.57.95–லிருந்து ரூ.58.56 ஆக உயர்ந்தது.
இதே போன்று மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு 63 காசு உயர்ந்து ரூ.62.60–லிருந்து ரூ.63.23 ஆகி உள்ளது. கொல்கத்தாவில் 59 காசு உயர்ந்து ரூ.58.91 லிருந்து ரூ.59.50 ஆகி உள்ளது. டெல்லியில் 57 காசு அதிகரித்து ரூ.54.34–லிருந்து ரூ.54.91 ஆக கூடி உள்ளது.இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்து விட்டது.
கியாஸ் சிலிண்டர் விலைகுறைவு
மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1234 ஆக இருந்தது. இப்போது ரூ.102 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சிலிண்டர் விலை ரூ.1132 ஆகி உள்ளது.மும்பையில் விலை சிலிண்டருக்கு ரூ.105.50 குறைந்து ரூ.1273 லிருந்து ரூ.1167.50 ஆகி இருக்கிறது. கொல்கத்தாவில் ரூ.101 குறைந்து ரூ.1270 லிருந்து 1169 ஆகி உள்ளது. டெல்லியில் ரூ.107 குறைந்து ரூ.1241 லிருந்து ரூ.1134 ஆகி இருக்கிறது.
பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல், மண் எண்ணெய், மானியத்துடனான கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையில் மாற்றம் இல்லை.
Comments
Post a Comment