மாணவிகள் பாதுகாப்பு: புதிய நடத்தை விதிகள்:
பெண்கள் கல்லூரி வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களில் அதிக அளவில் பெண் நடத்துனர்களை நியமிக்க வேண்டும்" என, கலெக்டர் ராஜேஸ் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஸ், ஆட்டோக்கள், கல்லூரி வாகனங்கள், பள்ளி வாகனங்கள், சுற்றுலா பஸ்கள் மற்றும் மேக்சி கேப் ஆகிய வாகனங்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் பயணத்தின் போது அவர்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைளை தடுக்கும் பொருட்டு, அனுமதி சீட்டில் கூடுதல் நிபந்தனைகள் விதிப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ராஜேஸ் தலைமையில் நடந்தது.
இதில் கலெக்டர் ராஜேஸ் பேசியது: "நகர பஸ்களில் முன்புற வழி பெண் பயணிகள் மற்றும் குழந்தைகள் மட்டும் ஏறி இறங்க பயன்படுத்தவேண்டும். மேலும் முன்புறம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பின்புற வழி ஆண் பயணிகள் மட்டும் ஏறி இறங்க பயன்படுத்த வேண்டும்.
பின் புறம் ஆண்கள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். இந்த நடைமுறை வரும் டிசம்பர், 1ம் தேதி முதல் அமுல்படுத்தப்படும். சுற்றுலா வாகனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்கள் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு வர்ண பிலிம்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
பெண்கள் சிறப்பு பஸ்கள், பெண்கள் கல்லூரி வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களில் அதிக அளவில் பெண் நடத்துனர்களை நியமிக்க வேண்டும். பணியின்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் உரிய சீருடை அணிந்து பெயர் வில்லை அணிந்திருக்க வேண்டும்.
ஆட்டோக்களில் அனுமதி சீட்டுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது. டாடா ஏஸ் போன்ற சரக்கு வாகனங்களில் எந்த சூழ்நிலையிலும் ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது.
இவ்வாறு ஏற்றி சென்றால் அவ்வாகனங்கள் பறிமுதல் செய்து உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்யும், பெண் பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வாகன உரிமையாளர்கள் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும். பயணத்தின் போது வன்முறைகள் நேர்ந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.
Comments
Post a Comment