புதிய மென்பொருள் இல்லாததால் காட்சிப்பொருளாக மாறிய மடிக்கணினிகள்-Dinamalar:
பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியில், "ஜாஸ்" என்ற சிறப்பு மென்பொருள் பொருத்தாததால், மடிக்கணினியை பயன்படுத்த முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு, பார்வையற்ற மாணவர் பயன்பெறும் வகையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், பள்ளி, கல்லூரிகளில் பயிலும், 300 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. அதே போல், இந்த ஆண்டும், 200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மடிக்கணினி வழங்கப்பட்ட போது, "ஜாஸ்" என்ற மென்பொருள் பொருத்தப்படவில்லை.
இந்த மென்பொருளை பொருத்தினால், ஒவ்வொரு பட்டனை அழுத்தும் போதும், அந்த பட்டன் பற்றி கூறும். குறிப்பாக, "ஆல்ட்" பட்டனை அமுக்கினால், "ஆல்ட்" என, சத்தமாக கூறும். இந்த மென்பொருளை, பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளில் பொருத்த, அரசு முடிவு செய்து, அதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
அதே போல், பாதியளவு பார்வை தெரியும் மாணவர் படிக்கும் வண்ணம், பூதக்கண்ணாடிகள் வாங்க, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இரண்டு திட்டங்களும், கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், மடிக்கணினியை பயன்படுத்த முடியாமல், பார்வையற்ற மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பார்வையற்ற பட்டதாரி மாணவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "மாணவர்களுக்காக வழங்கப்பட்ட மடிக்கணினி, வீட்டில் காட்சிப் பொருளாகவே இருக்கிறது. அதை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறோம். காட்சிப் பொருளாக இருப்பதற்கு, அதை எங்களுக்கு கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்" என்றனர்.
Comments
Post a Comment