இளைஞர் படை" தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கல்:
சேலம் மாவட்ட, எஸ்.பி., அலுவலகத்தில் இளைஞர் படை தேர்வுக்கான விண்ணப்பம் வரும், 2ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது. அதற்காக, இரு சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.தமிழகத்தில், போலீஸ் பற்றாக்குறையை சமாளிக்க, "இளைஞர் படை" உருவாக்கப்பட்டுள்ளது. இப்படையில் பணியாற்ற, தமிழகம் முழுவதும் உடல் திடகாத்திரம் கொண்ட 10,500 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல்லில் மொத்தம் 805 பேர், சேலம் மாவட்டத்தில் மட்டும் 245 பேர் தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சேலம் எஸ்.பி., அலுவலகத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி., டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தலைமையில், எட்டு எஸ்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அன்று மாலை, சேலம் எஸ்.பி., சக்திவேல் தலைமையில், மாவட்ட அளவில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், விண்ணப்ப விநியோகம் செய்தல், அதற்காக தனிக் கவுன்டர், விற்பனை நேரம், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை திரும்ப பெறுதல் போன்ற பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, செப்.,2ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதற்காக, எஸ்.பி., அலுவலக தரை தளத்தில் இரு கவுன்டர்கள் திறக்கப்படுகிறது. அதில் விண்ணப்பம் பெறவும், திரும்ப ஒப்படைத்தல் என, தனித்தனி கவுன்டர் செயல்படும். அலுவலக நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பம் பெறலாம்.
தேர்வுக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் பெறலாம். பெறப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பணியாற்ற விரும்பும் மாவட்ட எஸ்.பி., அலுவலக கவுன்டரிலும் நேரில் வழங்கலாம். ஒரு பக்கம் கொண்ட விண்ணப்பத்துடன் வயது சான்று, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்றதற்கான கல்விச்சான்று, சாதிச்சான்று மற்றும் இருப்பிட சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து, அதில் மார்பளவு போட்டோவை இணைத்து ஒப்படைக்க வேண்டும்.
தவறு, பிழை மற்றும் அடித்தல், திருத்தல் கொண்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும். எனவே, விண்ணப்பத்தை பிழையின்றி பூர்த்தி செய்வதோடு, முகவரி, மொபைல் எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் திருப்ப ஒப்படைக்க வரும் அக்.,1ம் தேதி மாலை 5.45 மணி வரை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் உடைய இளைஞர்களுக்கு, நவ.,10ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும். முதல் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தில் இருந்தும், பொது அறிவு தொடர்பான வினாக்களும், தேர்வில் இடம் பெறும்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறும் இளைஞர்களுக்கு, அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு, உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். அதையடுத்து, தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் தொடர்பாக, போலீஸ் விசாரணை நடத்தி, தேர்வு செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்படும்.
வரும் ஜனவரி 2014ல் பொங்கல் பண்டிகைக்கு பின் போலீசுக்கு நிகரான பயிற்சி அளிக்கப்பட்டு, பணி நியமனம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. மேலும், தகவல் பெற விரும்புவோர் 99439-66606 என்கிற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Comments
Post a Comment