அறிவு சார்ந்த மாணவர்களை அதிகப்படுத்த வேண்டும்:
கல்லூரியில் அறிவு சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும்" என வேலூர் வி.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில், சென்னை பல்கலை, முன்னாள் துணை வேந்தர் ஞானம் பேசினார்.வேலூர், வி.ஐ.டி., பல்கலை, 28வது பட்டமளிப்பு விழா, வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்தது. சென்னை பல்கலை, முன்னாள் துணை வேந்தர் ஞானம், 5,233 மாணவ, மாணவியருக்கு, பட்டம் வழங்கி பேசியதாவது:
அறிவு சார்ந்த பொருளாதாரம் இருந்தால் தான், நாட்டின் அடிப்படையில் முன்னேற்றம் ஏற்படும். கல்லூரிகளில், அறிவுக்கும், அறிவு சார்ந்த பொருளாதாரத்துக்கும், திறன் வளர்ப்புக்கும், முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது தான், நாட்டில் தேசிய வருமானம் கூடும்.
கல்வி நிறுவனங்களில், அறிவு சார்ந்த மாணவர்கள் எண்ணிக்கை, குறைந்து வருகிறது. அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். புத்தக அறிவோடு, பேசும் திறன், ஆராயும் திறன், தொழில் துறை திறன் கலந்து தர வேண்டும். சமுதாயக் கல்வி துவங்கி, திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்.
இன்ஜினியரிங் கல்லூரிகளில், தரமான ஆராய்ச்சி செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தற்போது, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பமே, இன்ஜினியரிங் கல்லூரிகளில் பயன்படுத்தப்படுகிறது. தரமான ஆராய்ச்சி மேற்கொண்டால் தான், நம்முடைய தொழில் நுட்பத்தையே பயன்படுத்தி, தரமான பொருட்களை தயாரிக்க இயலும். இவ்வாறு அவர் பேசினார்.
அசஞ்சர் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர், ராகவன் ஐயர் பேசுகையில், "கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற பிறகு, யாரும் தொடர்ந்து படிப்பது இல்லை. மாறி வரும் தொழில் துறை, தொழில்நுட்பம், பொருளாதாரம் காரணமாக, எந்த தொழிலில் இருப்பவர்களும், அறிவு, நவீன முன்னேற்றம், மென் திறன், பேசும் திறன் குறித்து, படித்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்றார்.
வி.ஐ.டி., வேந்தர், விசுவநாதன் பேசியதாவது: பள்ளி, கல்லூரிகளுக்கு சேவை வரியை, மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ளன. யோகா கல்விக்கும், கட்டடங்கள் கட்ட, அதிகளவு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்கள் மீது விழும். பல்வேறு கல்விக் குழு, மொத்த வருமானத்தில், 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்க பரிந்துரை செய்துள்ளது.
ஆனால், 4 சதவீதத்துக்கு மேல் ஒதுக்கவில்லை. இதனால் மாணவர்கள், கல்விக்காக, 7.5 சதவீதம் செலவழிக்கின்றனர். கல்விக்கான செலவை, குறைக்க வேண்டும். மாணவர்களிடம் அதிகம் வசூலிக்கக் கூடாது. வி.ஐ.டி.,யில் ஆண்டு தோறும், 6 கோடி ரூபாய்க்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Comments
Post a Comment