மதுரை புத்தகத் திருவிழா துவக்கம்: செப். 1ல் ஓவியப் போட்டி:
மதுரையில் நடக்கும் புத்தகத் திருவிழாவில், செப்., 1ல் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் நடக்கின்றன. விருப்பமுள்ள ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இதில் பங்கேற்கலாம்.
தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், மதுரையில் 8வது புத்தகத் திருவிழா இன்று (ஆக.,30) துவங்கி, செப்., 9 வரை நடக்கிறது. ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நடக்கின்றன.
ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் தமுக்கம் கலையரங்கில், செப்., 1ல் காலை 9 மணிக்கு துவங்குகின்றன. முன்பதிவு தேவை இல்லை. பள்ளி அடையாள அட்டையுடன் வர வேண்டும். ஐந்து முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் ஓவியங்கள் வரையலாம். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, போட்டி துவங்கும் முன் "தலைப்பு" வழங்கப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே ஓவியம் வரைய வேண்டும்.
வரைவதற்கான "சார்ட்" மட்டும் கலையரங்கில் வழங்கப்படும். வரைய தேவையான கிரையான்ஸ், பென்சில், வாட்டர்கலர் உட்பட தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டு வர வேண்டும். ஒரே பள்ளியில் இருந்து எத்தனை மாணவர்களும் பங்கேற்கலாம்.
முதல் பரிசு ரூ.2 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.ஆயிரம், 3வது பரிசு ரூ.500. நிறைவு விழாவின் போது அனைத்து பரிசுகளும் கூப்பன்களாக வழங்கப்படும். இதை பயன்படுத்தி புத்தகத் திருவிழாவில் விரும்பிய அரங்குகளில் புத்தகங்கள் வாங்கலாம். போட்டிகள் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் செந்தூரனை 94435 72224ல் தொடர்பு கொள்ளலாம், என தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. புத்தகத் திருவிழாவிற்கான, ஊடக உதவியை, தினமலர் நாளிதழ் வழங்குகிறது.
Comments
Post a Comment