சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கு யோகா பயிற்சி:
சென்னை மருத்துவக் கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. தொடர்ந்து பல வாரங்களுக்கு, இந்த பயிற்சி, சென்னை மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட உள்ளது.
மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். டாக்டர்களே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், நோயாளிகளின் நிலை மோசமாகிவிடும். இப்பிரச்னை வராமல், முளையிலேயே கிள்ளி எறியும் விதமாக, சென்னை மருத்துவ கல்லூரியில், கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, யோகா பயிற்சி வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று முதல், யோகா பயிற்சி துவக்கப்பட்டது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, அரசு யோகாசனம் மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் கூடுதல் பேராசிரியர், வெங்கடேஸ்வரன் பயிற்சி வழங்கினார்.
இதில், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். யோகா பயிற்சியில், ஊட்டச்சத்து முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, மனக்கட்டுப்பாடு மற்றும் எளியமுறையில் வாழ்வு முறையை மாற்றியமைத்தல் ஆகியவை அளிக்கப்படுகின்றன.
அலுவலக பணியில், வேலைப் பளு உள்ளவர்கள், 20 நிமிடம் யோகா பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டது. எளிய மூச்சுப் பயிற்சி, மூட்டுக்கள் மற்றும் சதைகள் தளர்த்தலுக்கு பயிற்சி ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து பல வாரங்களுக்கு, இந்த பயிற்சி, சென்னை மருத்துவக் கல்லூரியில் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.
Comments
Post a Comment