பள்ளிகளுக்கு செல்லும் ஆட்டோக்கள் பதிவு அவசியம்: போக்குவரத்து துறை:
பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும், ஆட்டோ உள்ளிட்ட பிற வாகனங்கள் குறித்த விவரத்தை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்" என போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.
கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, பள்ளி வாகனங்கள், விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுவது குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண்காணிப்பை தீவிரப்படுத்த, போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, தமிழகத்தில் உள்ள, 11 போக்குவரத்து துறை மண்டலங்களில், மண்டலத்திற்கு தலா, நான்கு முதல், ஐந்து சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில், போக்குவரத்து குழு அமைப்பது, தகுதி சான்றிதழ் பெறாத வாகனங்கள், உடனடியாக அதை பெற செய்தல் உள்ளிட்ட விஷயங்களில், அக்குழுக்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், பள்ளி வாகனங்களை தவிர்த்து, ஆட்டோ, மேக்சி கேப், ஆம்னி டாக்சி உள்ளிட்ட பிற வாகனங்களிலும், மாணவ, மாணவியர் செல்வதும் வழக்கம். இந்த வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, போக்குவரத்துத் துறை, சில விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும், ஆட்டோ உள்ளிட்ட பிற வாகனங்கள், அந்த பகுதியில் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, 12 வயதுக்கும் குறைவான வயது உடைய, மாணவ, மாணவியர் இருப்பின், ஐந்து பேரை மட்டுமே, ஆட்டோவில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
12 வயதுக்கு மேல் இருப்பின், மூன்று பேருக்கு மட்டுமே, அனுமதி உண்டு. மேலும், பள்ளிகளுக்கு செல்லும் போது, "பள்ளிப் பணிக்காக" என்ற வாசகம் வாகனத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
மாணவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி, இறக்கி விடுதல்; சாலையை கடக்க உதவி செய்தல் உள்ளிட்ட பணிகளையும் வாகன ஓட்டுநர்கள் செய்யலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
Comments
Post a Comment