ஜனாதிபதியிடம் பரிசு பெறுவதற்காக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவி:
கட்டுரைப்போட்டியில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மாணவி, பரிசு வழங்கும் தேதியில் மாற்றமில்லை என்று அறிவித்ததால், பொதுத்தேர்வை எழுதாமல் ஜனாதிபதியிடம் பரிசு பெற சென்றார்.
டாடா நிறுவனம், பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியை நடத்தியது. தேசிய அளவில் 5000 மாணவர்கள் பங்கேற்றனர். மொழி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழகத்தில் நடந்த போட்டியில் சுற்றுச்சூழல் என்ற தலைப்பில், திண்டுக்கல், புனித வளனார் மேல்நிலைப்பள்ளியின், 10ம் வகுப்பு, மாணவி ஐஸ்வர்யா, இரண்டாம் இடம் பெற்றார்.
டில்லியில் நடந்த விழாவில் தேசிய அளவில் தேர்வான மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, "மினி லேப் டாப்," "ஷீல்டு," ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார். ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற மாணவி ஐஸ்வர்யாவை, கலெக்டர் வெங்கடாசலம் பாராட்டினார்.
ஜனாதிபதி பரிசு பெறும் நாள் முடிவு செய்யப்பட்ட அன்று, ஐஸ்வர்யாவிற்கு 10 ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்தது. பரிசு வழங்கும் தேதியில் மாற்றமில்லை என்று அறிவித்ததால், பொதுத்தேர்வை எழுதாமல் ஜனாதிபதியிடம் பரிசு பெற சென்றார்.
ஐஸ்வர்யா கூறுகையில், "இந்த ஆண்டே சிறப்புதேர்வு எழுதி பிளஸ் 1 சேர்ந்து விடுவேன். இதனால் கல்வி ஆண்டு வீணாகாது. ஜனாதிபதியிடம் பரிசு என்பது வேறு நாளில் கிடைக்காது என்பதால் பரிசு பெற சென்றேன்," என்றார்.
Comments
Post a Comment