வினாத்தாள் குளறுபடிகளுக்கு சலுகை மதிப்பெண்கள் தீர்வாகுமா ?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் இரண்டாம் தாளில் ஏற்பட்ட குளறுபடியால் அந்த வினாவிற்கு விடையளிக்க முயற்சித்துள்ள அனைவருக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த பிரச்னைக்கு முழு மதிப்பெண்கள் வழங்குவது சரியான தீர்வாக அமையுமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
கல்வியாளர்கள் கருத்து:
பொதுத்தேர்வுகளில் சில சமயங்களில் நேரும் குளறுபடிகளால், தெரிந்த வினாக்களுக்கு கூட பதிலளிக்க முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். லட்சக்கணக்கானோர் வாழ்க்கையை தீர்மானிக்கும் இத்தகைய தேர்வுகளுக்கு வினா தயாரிக்கும் பணியில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டுமென்கின்றனர் கல்வியாளர்கள்.
மாணவர்கள் கவலை: குளறுபடி ஏற்பட்ட வினாவுக்கு விடையளிக்க முயன்றிருந்தால் முழு மதிப்பெண்களும் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. நேரமின்மை மற்றும் குழப்பத்தின் காரணமாக அந்த வினாவை எழுத முயற்சிக்காதவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்கின்றனர் மாணவர்கள். குளறுபடி வினாவுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், சிலருக்கு மட்டுமே இந்த அறிவிப்புகள் சாதகமானது என்ற வாதத்தை முன் வைக்கின்றனர் கல்வியாளர்கள். தேர்வுக்கு முறையாக தயார் செய்து அதன் மூலம் மதிப்பெண் பெற எண்ணும் மாணவர்கள் அதிருப்தி அடைவதற்கும் வாய்ப்புள்ளது என்பதும் அவர்கள் கருத்து.
வினாத்தாள் குளறுபடிகளும், அவற்றிற்கு தீர்வாக மறுதேர்வுகள் மற்றும் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படுவதும் தொடர் நிகழ்வாகவே உள்ளன. சலுகை மதிப்பெண்கள் சில மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு ஏமாற்றத்தையும் அளிப்பதாக கூறுகின்றனர் மாணவர்கள். குளறுபடிகளும், அதற்கு தீர்வாக சலுகைகளும் இல்லாமல் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த பிரச்னைக்கு உரிய தீர்வாக இருக்க முடியும்.
Comments
Post a Comment