10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் இரண்டாம் தாளுக்கான விடைத்தாளுடன் வழங்கப்பட வேண்டிய மாதிரிப் வங்கி படிவம் வழங்கப்படாததால் மாணவர்கள் மத்தியில் குழப்பமும் அதிருப்தியும் நிலவியது. இறுதியில் அந்த வினாவிற்கு விடையளிக்க முயற்சித்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை எதிர்கொண்ட மாணவர்கள் மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து அறியலாம்.
தொடரும் கேள்வித்தாள் குளறுபடிகள்:10-ஆம் வகுப்புக்கான தமிழ் இரண்டாம் தாளுக்கான பொதுத் தேர்வில் விடைத்தாளுடன் மாதிரி வங்கி படிவம் வழங்கப்படாததால், மாணவர்கள் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். என்னதான் தயார் செய்து தேர்வுக்கு சென்றாலும் வினாத்தாளிலேயே குளறுபடி என்றால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்புகிறார் சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் சதீஷ்குமார். மேலும் விடைத்தாளில் படிவத்தை வரைந்து விடையளிக்க வேண்டியிருந்ததால், நேரப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் கூறுகிறார் இவர்.
நேரமின்மையால் திணறிய மாணவர்கள்:அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் சதீஷ்குமார், தற்போது அடுத்த தேர்வுக்காக தயாராகி வருகிறார். இறுதியில் விடையளிக்கலாம் என்று நினைத்து போதிய நேரம் இன்மையால் பல மாணவர்கள், குறிப்பிட்ட அந்த வினாவுக்கு விடை அளிக்காமல் வந்ததாக தன் நண்பர்கள் சிலர் தெரிவித்தாகவும் சதீஷ்குமார் கூறுகிறார். பொதுத்தேர்வில் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் அனைத்து மாணவர்களுக்குமே முக்கியமானவைதான் என்கிறார் இவர்.
முழு மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள்:தமிழ் இரண்டாம் தாளில் 38-ஆவது வினாவிற்கு விடையளிக்க முயன்றிருந்தாலே முழு மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்களில் ஒரு தரப்பினர் இதை வரவேற்றாலும், விடை தெரிந்தும் குளறுபடியால் வினாவிற்கு விடையளிக்காதவர்கள் மதிப்பெண்களை பெற முடியாது என்பது வருந்தத்தக்கது என்கின்றனர் மற்றொரு தரப்பினர். இனிமேலும் இதுபோன்ற குளறுபடிகள் நடக்கக் கூடாது என்பதே சதீஷ்குமார் உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments
Post a Comment